Sunday, February 21, 2010

தரம்

கவிதைகளை வாசித்துக்காட்டும் போதெல்லாம்,
அவள் புருவங்களையும், உதடுகளையும்,
கவனிப்பேன்...
அதில் தெரிந்து விடும்
என் கவிதையின் தரம்.

என் பேனா

வார்த்தைதேடி வாக்கியம் அமைத்து,
கனவு பிழிந்து கவிதை புனைய,
தேடும்போதெல்லாம் கிடைப்பதே இல்லை...
நீ இரவல் கேட்டதும் எங்கிருந்தோ,
முளைத்துவிடுகிறது என் பேனா...

கூந்தல்

அலைபாயும் கூந்தலை,
அள்ளி நீ முடிக்கும் போதெல்லாம் ,
ஆனந்தப்படுகிறேன்!
என்னைவிட அழகாய் வருடியதால்,
காற்றை நீ கடிந்து கொண்டதாய்!.

அயல்நாடு

அயல்நாடு!
சிறாரும் முதியோரும்,
சீராட்டும் தாய்மாரும்,
தம் கனவே என ஏங்கும் அயல்நாடு!

எனதருமை ஊராரும்,
என்னுயிரின் உற்றாரும்,
வளம்பெருக்க விரைந்ததோர் அயல்நாடு!

தம் குடும்பம் தளைத்தோங்க,
தமக்கைகள் மணமுடிக்க,
விதிஎனவே தலைப்பட்டதோர் அயல்நாடு!

ஓடி உழைத்துக் களைக்கையில்,
தொலைபேசியில் மணத் தூதுவர,
ஆசை அடக்கி அடைபட்டதோர் அயல்நாடு!

மணமுடித்த மறுமாதம் பயணம்,
மந்திரித்த கோழியாய் மனம் பதற,
கண்கசக்கி கரை சேர்ந்ததோர் அயல்நாடு!

காதலை செல்பேசிக்கும், கண்ணீரை கடிதங்களுக்கும்,
காவு கொடுத்துவிட்டு கலங்கி நிற்போரை,
ஏளனமாய் பார்க்கிறதோ?
விழுங்கிவிட்ட அயல்நாடும், விலகிவந்த தாய்நாடும்!..

Thursday, February 4, 2010

எங்கே மனிதம்?...

நெஞ்சு கிழித்து குருதி குடிக்கும்
குரூரம் இங்கே கண்டேன்!
நஞ்சு பொதிந்து வாக்கு தவறும்
வஞ்சம் இங்கே கண்டேன்!

ஆசை அழித்து அறிவு மழுங்கி
அகம்பாவம் இங்கே கண்டேன்!
கனவு தகர்த்து உறவு மறந்த
கர்வம் இங்கே கண்டேன்!

மனம் நசுக்கி பணம் புசிக்கும்
பாவம் இங்கே கண்டேன்!
மனிதன் கொன்று மனிதன் தின்னும்
மடமை இங்கே கண்டேன்!

எங்கே மனிதம்? எங்கே மனிதன்?
கொட்டும் கண்ணீர் குரல்வளை அடைக்க,
குருதி சுண்டி சாகும்வரை மறவேன் இதை...
எங்கே மனிதம்? எங்கே மனிதன்?...