Friday, December 11, 2009

மகள்

குளிர்மலர் முகமதில்,
குறுநகை கனியே!
பஞ்செனும் கையதில்,
நகமது பிறையே!

சுடர்விழி பார்வையதில்,
ஈர்ப்பது விசையே!
வளி செல்லும் நாசியதில்,
கவர்வது கனிவே!

எங்கள் தேவதை இவளே!
எங்கள் தேவையும் இவளே!

இனியொரு பிறப்பினும்,
இவளே மகளாய்!
அமைந்திட வரமே,
அருள்வாய் இறைவா!...

Tuesday, November 24, 2009

ஓர் இரவு

ஊளையிடும் நாய்,நரியின் ஓசைக்கும்,
சலசலக்கும் மரங்களின் பாடலுக்கும்,
கவனமாய் தலையசைத்தபடி,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிழலுருவங்கள்.

என்றோ கூடிகழித்த போகியின் நினைவாய் புகை மூட்டம்,
குளிருக்கும் மனதிற்கும் இதம் தான் போலும்!.

இயந்திர துப்பாக்கியை அவ்வப்போது துடைத்தபடி புகை வழியும் வாயோடு,
இன்றோ நாளையோ! இறையோ பலியோ!  தயாராய்...

படித்து படித்து கிழிந்தே போன காதலியின் கடிதம் கையிலிருக்க,
வழியும் கண்ணீரிலும் சலனமற்ற  கவனமாய்!.

இவர்களின் உலகம் தனிதான்...

தோட்டா உரசிச்சென்ற காயமுண்டு!
பலர் உருப்பிழந்த சோகமுண்டு!
உடல் சிதறிப்  போனதுண்டு!
பலர் உயிரற்றே மாண்டதுண்டு!

நாடுகள் ஆடும் சதுரங்கம்,
இவர்களல்லவோ பகடைகள்!
கூடுகள் விட்டு பிரிந்து வந்த,
சிறகில்லா பறவைகள்!

யார் அறிவார் இவர் மனதின் ஆழங்கள்?
யார் அறிவார் இவர் மனதின் சோகங்கள்? 
இப்படியே நீளும் இந்த இரவும் சொல்லும்...
இனி
எல்லையில்லா தேசம் ஒன்றே மனிதம் நல்கும்!.

Friday, November 13, 2009

என் ஜன்னல்

திறந்தே வைத்தேன் என் அறையின் ஜன்னலை...

அவள் மேனி தொட்ட காற்று என் சுவாசம் வருமென்று!
வந்தமரும் சிறு பறவை அதில் தூது வருமென்று!
வாசல் தெளிக்கச்  செல்கையில், பல் துலக்கியபடி புன்னகைக்க!
மொட்டை மாடி துணி உலர்த்தயில் ஓரப்பார்வை விழு மென்று!
திறந்தே வைத்தேன் என் அறையின் ஜன்னலை!.

ஊரெல்லாம் பண்டிகை கேளிக்கையில், நான் மட்டும்
ஜன்னலோரம் தனித்திருந்தேன் அறியாததேனோ?
எட்ட நின்றே ரசித்தாலும், அவளருகில்
நிழலாய் நானிருந்தேன் உணராததேனோ?

காற்றுக்கும், பறவைக்கும் புரிந்த என் காதல்,
கள்ளி அவளின் நெஞ்சிற்கு புரியாததேனோ?
காத்திருந்த போது வந்த கவிதையெல்லாம்
கண்ணீரால் அழிந்தது தெரியாததேனோ?

போதும் போதும்
இனி பொறுத்தல் ஆகாது! என் ஜன்னல் கூட பொறுமை காக்காது!
சொல்லி விடலாம் என்றெண்ணிய போது
சொல்லியே விட்டாள் அவள் "எனக்கு கல்யாணம் அவசியம் வாங்க"..

அப்போதிலிருந்து,
என் அறையின் ஜன்னலை மூடியே வைக்கிறேன்..
எங்கேனும் ஒளிந்து கொண்டிருக்கும் அவள் மேனி தொட்ட காற்றும்
அவளை போல் என்னை நீங்கி விடக்கூடாதென்று...

Tuesday, November 3, 2009

கனவு

ஒரு மாலைநேர பேருந்து பயணம்,
ஜன்னலோர இருக்கை,
சற்றே கண்ணயர்ந்தேன்...

அடர்ந்த காடு அவள் கையைப்பற்றி இழுத்தபடி
தலைதெறிக்க ஓடுகிறேன்...

வாகனம் ஒன்றில் முன் இருக்கையில் நான்
பின் இருக்கையில் அவள்
முத்தமிடுகிறேன் உதட்டில்...

பக்கம் வரச்சொல்லி  பாவனை செய்கிறாள் அவள்
அருகில் நெருங்கி முகம் பார்த்து பூரிக்கையில்...

சட்டென அடித்த brake-ல் நெற்றி வீங்கியது,

'சாவு கிராக்கி'
குறுக்கே புகுந்த ஆட்டோக்காரனை திட்டினார் ஓட்டுனர்,
நானும்...!

Saturday, October 24, 2009

கல்லூரி வருடங்கள்...

கனவுகளோடும் கவிதைகளோடும்
மூழ்கி எழுந்த வருடங்கள்!.

யார் முதலில் துயில் எழ?
போர்வைக்குள் உடல் குறுக்கிய வருடங்கள்!.

டீக்கடை  தோறும் கதைபேசிய படி
மணித்துளிகளை விழுங்கிய வருடங்கள்!.

கல்லூரி கசந்த போதெல்லாம் ஒன்றாய்
ஊர் சுற்றி 'களித்த' வருடங்கள்!.

விடுதி மொட்டை மாடியில்
நட்சத்திரம் எண்ணிய வருடங்கள்!.

அரியர் இல்லாதவன் அரை மனிதன்
தத்துவம் பயின்ற வருடங்கள்!.

நட்பின் பிரிவை  எண்ணி
இமைக்கும் தெரியாமல் அழுத வருடங்கள்!.

இன்று!
அவ்வப்போது வரும் மின்னஞ்சல்கள் கேட்கிறது
நண்பா என்று திரும்பும் அந்த கல்லூரி வருடங்கள்!...

Tuesday, October 20, 2009

இதுவே துவக்கம்...

முதன் முதலாக எழுதத் துவங்கிய போது வணங்கினேன் இப்படி.....

தமிழுக்கு வணக்கம்!
தாய் நாட்டுக்கு வணக்கம்!
உறவுக்கு  வணக்கம்!
உயிர் நட்புக்கு வணக்கம்!
கலைகளுக்கு வணக்கம்!
கவிதைக்கு வணக்கம்!
திறமைக்கு வணக்கம்!
தமிழ் திமிருக்கு வணக்கம்!.